முற்றுப்பெறாத நிலையில் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறினால் மாணவர்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். -- ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு, கிழக்கு மாகாண செயலாளர் ஜீ. ருபேசன்


முற்றுப்பெறாத நிலையில் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறினால் மாணவர்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். -- ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு, கிழக்கு மாகாண செயலாளர் ஜீ. ருபேசன்


அழகியல் பாடத்தின் பெறுபேறு இல்லாமல், முற்றுப்பெறாத நிலையில் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறினால் மாணவர்கள் உளரீதியாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

என இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு, கிழக்கு மாகாண 
செயலாளர் ஜீவராஜா ருபேசன் தெரிவித்தார்

மட்டக்களப்பில்  இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

உங்களுக்கு தெரியும்  தினம் திடீரென கல்வி பொது சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டு இருக்கின்றது. உண்மையில் நல்ல விடயம். மாணவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சிறந்த செயற்பாடு அது. 

இருந்தபோதிலும் இந்த காலகட்டத்தில் அழகியல் பாடங்களுக்கான பெறுபேறுகள் வெளியிடப்படவில்லை. இதனால் சில மாணவர்கள் 9A சித்தி பெற்று தங்களுடைய வெற்றிகளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அதேவேளை சில மாணவர்கள் 8A எடுத்துவிட்டு அழகியல் பாடத்தில் பெறு பேறு இல்லாததால் இவர்கள் 9A என்கின்ற ஒரு விடயத்தில் தங்களுடைய வெற்றியை கொண்டாட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். 

இது மாணவர்களை உளரீதியாக பாதிக்கும் செயற்பாடு. 
அழகியல் பாட பெறுபேறுகள் வெளியிடப்படாமைக்கு ஆசிரியர்களே  காரணம் என்று ஆசிரியர்களை பிழையாக கூற வேண்டாம். காரணம் கொவிட் நிலமையில்   இந்த ஒண்லைன் கற்றலை சுயமாக முன்வந்து நடாத்தியவர்கள் ஆசிரியர்களே. ஆனால்  ஆசிரியர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடுகின்ற பொழுது சரியான முடிவினை பெற்றுத்தர அரசாங்கம் முன்வராமையே மாணவர்களுக்கான பூரண பெறுபேறு கிடைக்காமைக்கான   காரணமாகும். 

அடுத்ததாக இந்த அழகியல் பாட பெறுபேறு வெளியிடப்படாமையானது மாணவர்கள் உயர் தரத்திற்கான பாடங்களைத் தெரிவு செய்வதில் செல்வாக்குச் செலுத்தும். அதாவது குறைந்தது 6 பாடங்களில் தேர்ச்சி மூன்று பாடங்களில் திறமைச்சித்தி பெறாத இந்த அழகியல் பரீட்சைக்கு முகம் கொடுத்த மாணவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இது இருக்கும். இது தொடர்பாக அரசு மாணவர்களுக்கு உடனடியாக தீர்வை வழங்க வேண்டும். 

அடுத்து பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பாக கூறிக்கொண்டு இருக்கும் அரசாங்கம் 10 வயது தொடக்கம் 16 வயது வரையான மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதாக ஒரு கதை கூறுகின்றார்கள். பின்னர் வேறு வயது அடிப்படைகளை கூறுகின்றார்கள். அதுமட்டுமின்றி இன்று கூறுகின்ற தடுப்பூசி வகை அல்ல நாளை கூறுவது. இவ்வாறு மாறிமாறி கூறிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இன்றைய மாணவர்கள் நாளைய நாட்டின் சொத்துக்கள். ஆகவே மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சரியான வைத்திய ஆலோசனைகளை பெற்று மாணவர்களுக்கு வழங்குவதற்கு எது சரியான தடுப்பூசி என்பதனை தீர்மானம் எடுத்து அதன் பின்னர் குறிப்பிட்ட மாணவர்களுக்கு மாத்திரம் வழங்காமல் நாட்டில் இருக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் சமமாக இந்த தடுப்பு ஊசிகளை  ஒழுங்கான திட்டத்தினூடாக அனைத்து மாணவர்களுக்கும் விரைவாக வழங்க வேண்டும்.

5000 ரூபாயை பெற  தகுதி உடைய ஆசிரியர்கள் என 23ம் திகதி ஒரு கடிதத்தை வெளியிட்டார்கள். இதில் பாடசாலை காவலாளி செய்கின்ற வேலையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எனவே வீணாக ஆசிரியர்களுக்கு எதிராக சூழ்ச்சிகளை செய்து கொண்டிருக்காமல் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதன் படி உடனடியாக இந்த ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். 
நீங்கள் என்னதான் ஆசிரியர்களை பிழையாக  சித்தரித்து சேறு பூசினாலும் சமுதாயத்திற்கு தெரியும் ஆசிரியர்களின் நியாயமான நடவடிக்கை. எனவே நாங்கள் எந்த அழுத்தங்களை கொடுத்தாலும் ஒருபோதும் எங்களுடைய போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்பதை நாம் அரசாங்கத்திற்கு கூறுகின்றோம். என தெரிவித்தார்


Post a Comment

0 Comments