மட்டக்களப்பில் இராணுவத்தின் வசமிருந்த காணிகளை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனால் விடுவிக்க நடவடிக்கை




ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாக கடந்த காலங்களில் பாதுகாப்பு படைவசமிருந்த அரச மற்றும் பொதுமக்களது காணிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் இராஜாங்க அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு மாவட்டத்திலும் படையினர் வசமிருந்து வருகின்ற பல காணிகளை விடுவிக்கும் வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அதன் ஒரு கட்டமாக அண்மையில் கும்புறுமுலையில் மூன்று தசாப்த காலமாக படையினர் வசமிருந்த 30 ஏக்கரிற்கு மேற்பட்ட தனியார் காணி விடுவிக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று முறக்கொட்டாஞ்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் இராணுவ முகாம் அமைந்திருக்கும் காணிகளையும் விடுவிப்பதற்காக படைத்தரப்பினருடன் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளை நடாத்திவரும் நிலையில்  ஞாயிற்றுக்கிழமை (15.08.2021 ஆந்திகதி ) கொக்கட்டிச்சோலையில் இராணுவ முகாம் அமைந்திருக்கும் காணியை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். 

கொக்கட்டிச்சோலை இராணுவ முகாமின் கீழுள்ள விடுதிக்கல் இராணுவ முகாம் அமைந்துள்ள தனியார் காணியை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் கொக்கட்டிச்சோலை இராணுவ முகாமிற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி ஜெனரல் ஹர்சன குணரத்ணவுடன் கலந்துரையாடியதன் பின்னர், இராணுவத்தரப்பு பிரதாணி லெப்டினன் ஜெனரல் நளின் கொஸ்வத்தவுடன் தொலைபேசியில் உரையாடி குறித்த தனியாருக்கு சொந்தமான காணியை மிக விரைவாக விடுவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். 

இதன் அடிப்படையில் குறித்த தனியாருக்கு சொந்தமான காணியை மிக விரைவாக விடுவிப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாக இராணுவத்தரப்பு பிரதானி வாக்குறுதியளித்துள்ளார். 

பல தசாப்தங்களுக்கு மேலாக பல்வேறுபட்ட இன்னல்களை அனுபவித்து வந்த எமது மக்களின் வாழ்வாதார மற்றும் வாழ்விட காணிகளை விடுவிக்க வேண்டுமென ஜனாதிபதியிடமும் இராணுவ தரப்பினரிடமும் நான் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த வேண்டுகோளிற்கு இணங்க படிப்படியாக எமது மக்களின் காணிகள் விரைவாக விடுவிக்கப்பட்டு வருகின்றன, அதற்கு அமைவாக அண்மையில் கும்புறுமுலையில் இராணுவ முகாம் அமைந்திருந்த காணியும் விடுவிக்கப்பட்டது,

அத்தோடு கொக்கட்டிச்சோலை மற்றும் முறக்கொட்டாஞ்சேனை போன்ற பகுதிகளில் படையினர் வசம் இருக்கின்ற காணிகளையும் மிக விரைவாக மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும், இதற்கு ஜனாதிபதிக்கு நன்றியினை தெரிவிப்பதாகவும் இதன்போது இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.



 


Post a Comment

0 Comments