முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டி வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் வவுனியா மாவட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'பாலியல் துஷ்பிரயோகம் என நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமற்ற தண்டனை வழங்க வேண்டும், சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும், சிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்துவதை உடனடியாக தடை செய்யுங்கள், சிறுமியின் மரணம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்துள்ளனர்.
குறித்த சிறுமியின் மரணத்திற்கு ஜனாதிபதியும், அரசாங்கமும் விரைவாக நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments